கண்டிப்பாக பெரியார் சிலையும் வாசகமும் அகற்றப்படும்: அண்ணாமலை உறுதி

By 
rangam

தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில்,

திருநெல்வேலியில் பட்டியிலின மாணவர் சின்னதுரை கொலை வெறி தாக்குதல், வேங்கை வயலில் 300 நாட்கள் மேல் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை, பெரம்பலூரில் கல்குவாரி டெண்டர் எடுக்க சென்ற பட்டியலினத்தவர் மீது தாக்குதல். சமூக நீதி காப்போம் என்று கூறும் திமுக ஆட்சியில் தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக ஆட்சியில்  லஞ்சம் லாவண்யம் ஊழல் அதிகரித்துள்ளது. சாமானிய மனிதனையும் பாதிக்க கூடிய அளவிற்கு ஊழல் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். 

பெரியாரைப் பற்றி அவருடைய சமூக கருத்துக்களில் எங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பு உள்ள பெரியார் சிலை, பொது இடத்தில் வைக்கப்படும் என்பது எங்கள் தேர்தல் வாக்குறுதியாக இருக்கும். பெரியார் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கூறிய கருத்துக்களை கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு முன்பு வைக்க முடியுமா?

அடுத்தவன் காலை நக்கி பிழைப்பவன் கம்யூனிஸ்ட் என்று பெரியார் சொன்னார், அந்த கருத்தை கம்யூனிஸ்ட்  முன் வைக்கட்டுமா என ஆவேசமாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,  அதைப்போல் திமுக அலுவலகத்திற்கு முன்பு பெரியார் சொன்ன விஷயத்தையும், இந்தியாவில் காங்கிரஸ் ஒழிக்க வேண்டிய கட்சி என்று பெரியார் கூறியதை காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு முன்பு வைக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். 

கடல் வற்றி கருவாடு சாப்பிடலாம் என்று நினைத்த கொக்கு.. குடல் வத்தி செத்துச்சாம் என பாஜகவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்தவர், கொக்குக்கு இருக்கும் பொறுமை அரசியல் கட்சி தலைவர்களுக்கு இருக்க வேண்டும். எங்கள் கொக்கு எப்படி 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீனை பிடிக்க போகுதுன்னு பொறுத்திருந்து பார்க்கவும். எங்களுக்கான நேரம் எப்போது என்று எங்களுக்கு தெரியும் 2026 தான் எங்களுக்கான நேரம் என்று பதில் அளித்துள்ளார்.  

பாஜகவின் துணை அமைப்பாக வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை செயல்படுகிறது என்பதை ஏற்று கொள்ள முடியாது. தவறு யார் செய்தாலும் வருமானத்துறை  வரும், அமலாக்கத்துறை துறை வரும், அதற்கு எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்றெல்லாம்  இல்லையென அண்ணாமலை தெரிவித்தார். 

Share this story