நான் அரசியலுக்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்; அரசியல் கட்சிகளுக்கு விஷால் கொடுத்த மெசேஜ்..

By 
ratnam

விஷால் நடித்து வெளிவரவிக்கும் ரத்தினம் திரைப்படத்தின் ப்ரோமோஷன் குறித்து, சேலம் அம்மாபேட்டையில் உள்ள சக்தி கைலாஷ் பொறியியல் மற்றும் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், நடிகர் விஷால் பங்கேற்றார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

2026-ல் திரையரங்குகளில் நிச்சயம் நான் இருப்பேன். வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். கட்சியோடு கூட்டணி  சீட்டு ஒதுக்கீடு பற்றி எல்லாம் யோசிக்க கூடாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை மட்டும் யோசித்து கட்சியை தொடங்கி விட வேண்டும். 2026 இல் அரசியலுக்கு வருவேன் என சொல்லியுள்ளேன். இப்பவும் சொல்றேன், என்னை வர விடாதீர்கள். மக்களுக்கு நீங்கள் நல்லது செய்து விட்டால், நான் படத்தில் நடித்து விட்டு போய்க் கொண்டிருப்பேன்.

இதைத்தான் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். 2026ல் இன்னொருத்தருக்கு ஏன் நீங்கள் வழி கொடுக்கிறீர்கள். நீங்கள் மக்களுக்கு நல்லது செய்து விட்டால் நாங்கள் எங்கள் தொழிலை விட்டுவிட்டு, உங்கள் தொழிலுக்கு வரமாட்டோம். தமிழ்நாட்டில் குறைகள் இல்லாத இடமே இல்லை. தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள், கொடிகள் இருக்கிறது. ஆனால், நல்லது எதுவும் நடக்கவில்லை. புதிதாக நான் வந்தாலும் நான் வந்து என்ன செய்வேன் என்பதைத்தான் அனைவரும் சொல்லுவார்கள். ஒரு வாக்காளராக சமூக சேவகராக என்னுடைய ஆதங்கத்தை நான் சொல்கிறேன்.

திமுக, அதிமுக என எந்த கட்சியாக இருந்தாலும் கவனம் செலுத்த வேண்டியது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்வது தான். மக்கள் ஏதாவது பிரச்சனை என்றால் அரசு மருத்துவமனைக்கு செல்வார்கள். எம் எல் ஏ  எம்பிக்கள் போன்ற நபர்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகிறார்கள். மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தாமல், அவர்கள் மட்டும் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர்.

தமிழ்நாட்டிற்கு அவசியம் மாற்றம் தேவை. இந்த ஆண்டு இறுதிக்குள் நடிகர் சங்க கட்டடம் முடிக்கப்படும். நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து, நடிகர் சங்கத்தில் பெரிய பெரிய  ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கிறார்கள் அவர்களிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.

Share this story