ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு : இத்தாலி இந்தியர்கள் உற்சாக வரவேற்பு..
இத்தாலி நாட்டில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, மோடி நேற்று டெல்லியில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்டார்.
உற்சாக வரவேற்பு :
இன்று காலை இந்திய நேரப்படி 9.30 மணிக்கு அவர் இத்தாலி நாட்டுக்கு சென்று சேர்ந்தார். விமான நிலையத்தில் அவருக்கு மிகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இத்தாலியில் வாழும் இந்தியர்கள், அதிகளவில் திரண்டு வந்து கைகளில் மூவர்ண கொடி ஏந்தி பிரதமர் மோடியை வரவேற்றனர்.
ஜி-20 மாநாடு :
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ரோம் நகரில் தரை இறங்கி உள்ளேன்.
இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும். ரோமில், எனது அடுத்த பயண திட்டங்கள் குறித்தும் ஆர்வமாக உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலியில், இன்று முதல் 31-ந்தேதி வரை 3 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவரையும் வாடிகனில் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இத்தாலி பிரதமர் மரியோவுடனும் அவர் பேசுகிறார்.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, சர்வதேச பொருளாதார விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக திகழும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீட்பது தொடர்பான தகவல்களையும் பிரதமர் மோடி பேச உள்ளார்.
இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி இங்கிலாந்து நாட்டுக்கு செல்கிறார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ்ஜான்சன் அழைப்பை ஏற்று அவர் அங்கு செல்கிறார்.
இங்கிலாந்தில் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.