பள்ளி மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ..

By 
arul

சேலத்தில் பள்ளியில் நடைபெற்ற சைக்கிள் வழங்கும் விழாவில் திமுக, பாமகவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் எம்எல்ஏ அருள் மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்.

சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினராக பாமக அருள் பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில் சேலம் பாகல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று மாணவர்களுக்கு இலவச மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தொகுதியின் உறுப்பினர் என்ற அடிப்படையில் எம்எல்ஏ அருள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

மேலும் விழாவில் திமுகனரும் பங்கு பெற்றிருந்தனர். இந்நிலையில், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை எம்எல்ஏ அருள் வழங்குவதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மிதி வண்டிகளை நாங்கள் தான் மாணவர்களுக்கு வழங்குவோம் என திமுகவினர் வாக்குவாதம் செய்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

இவை அனைத்தும் மாணவர்களின் முன்னிலையிலேயே அரங்கேறிய நிலையில், மாணவர்களின் மனஉளைச்சலுக்காக நானே மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறி சட்டமன்ற உறுப்பினர் அருள் மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

Share this story