அரசியல் சதுரங்கம் : பாஜகவில் இருந்து 7-வதாக எம்எல்ஏ விலகல்

By 
Political Chess 7th MLA resigns from BJP

உத்தரப்பிரதேச மாநிலத்தில், வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா, தாரா சிங் சவுகான் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். 

மேலும், சில பாஜக எம்.எல்.ஏக்களும் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், தற்போது 7-வதாக முகேஷ் வெர்மா என்ற எம்.எல்.ஏ.வும் பாஜகவில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதுகுறித்து அவர், 'உத்தரப்பிரதேசத்தில் 5 ஆண்டு பாஜக ஆட்சியில் தலித், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த தலைவர்களுக்கோ, பிரதிநிதிகளுக்கோ எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. 

மேற்கூறிய சமூகங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர். விவசாயிகளையும், வேலையற்ற இளைஞர்களையும் கூட பாஜக மறந்துவிட்டது. 

பாஜக, அம்பேத்கரின் அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தன்னுடைய சொந்த முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது. 

மக்களின் வளர்ச்சியை விட, தன்னுடைய வளர்ச்சி தான் பாஜகவிற்கு முக்கியம். இதனால், நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன். 

சுவாமி பிரசாத் மவுரியா தான் எங்கள் தலைவர். அவர் எந்த முடிவு எடுத்தாலும், நாங்கள் ஆதரவு தருவோம். மேலும், சில எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இருந்து விலகவுள்ளனர்' என்றார்.

தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் விலகி வருவது பாஜக தலைமையை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
*

Share this story