அரசியல் சதுரங்கம் : 60 தொகுதிகளிலும் பாஜக போட்டி..

By 
bjp7

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் வரும் 16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்துக்கு 27-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த மாநிலங்களில் தேர்தல் பணிகளை கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதற்கான வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம் போன்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. அங்கு முதல் மந்திரி கன்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்களின் கட்சியுடன் கூட்டணி அரசில் தற்போது நீடித்து வரும் நிலையில், வரும் தேர்தலில் பா.ஜ.க. தனித்து களம் காண்கிறது.

அதேநேரம், நாகாலாந்தில் கூட்டணி கட்சியான ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் இணைந்தே போட்டியிடுகிறது. அங்கு மொத்தமுள்ள 60 தொகுதியில் 20 இடங்களில் மட்டுமே பா.ஜ.க. போட்டியிடுகிறது என பா.ஜ.க. செயலாளரும், வடகிழக்கு மாநிலங்களுக்கான இணை பொறுப்பாளருமான ரிதுராஜ் சின்கா நேற்று தெரிவித்தார்.

மேகாலயாவில் பிரதமர் மோடியை முன்வைத்து பிரசாரம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேகாலயாவில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 47 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 2 இடங்களை வென்றது. எனினும் பிரதமர் மோடியை முன்வைத்து இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அந்த கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Share this story