'பொங்கல் பரிசு தொகுப்பு' திட்டம் : முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில், கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு, இந்த பரிசுத் தொகுப்பை வழங்குவதற்கு அடையாளமாக சிலருக்கு மட்டும் அவர் பரிசு பைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
21 பொருட்கள் :
இதையடுத்து, இன்று முதல் நியாயவிலைக் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்குகிறது.
அமைச்சர்கள், அதிகாரிகள் ஆங்காங்கே இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறார்கள்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம் பெறும் பொருட்கள் அனைத்தும் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றும், இந்த திட்டத்தை ஒருங்கிணைந்து திறம்பட செயல்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதற்கு ஏற்ப, மாவட்ட கலெக்டர்கள் பரிசுப் பொருட்களை கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்காக, தமிழக அரசு ரூ.1088 கோடி ஒதுக்கீடு செய்து இருந்தது. இதன்மூலம், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஏலம், முந்திரி, திராட்சை, கரும்பு ஆகியவற்றை கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
10 நாட்கள் :
தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 2.15 கோடி பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இன்றுமுதல் வருகின்ற 10 நாட்களும் பொதுமக்கள் சிரமமின்றி, நியாயவிலைக் கடைகளுக்கு வந்து இந்த பரிசுத் தொகுப்பை வாங்குவதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
*