சித்தராமையாவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து.

By 
sid4

கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, கர்நாடகாவில் பெங்களூருவில் முதல்-மந்திரியாக சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் ஆகியோர் முறைப்படி இன்று பதவியேற்று கொண்டனர்.

இதற்காக கர்நாடகாவின் பெங்களூருவில் கன்டீரவா ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றன. கவர்னர் தாவர்சந்த் கெலாட் முறைப்படி அவர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் ஆகியவற்றை செய்து வைத்து உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், புதிய மந்திரி சபையில் 8 எம்.எல்.ஏ.க்கள் இன்று மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கும், கவர்னர் கெலாட் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்து உள்ளார்.

இந்த நிலையில் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள டி.கே சிவக்குமார் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கு வாழ்த்துக்கள். சிறப்பான பதவிக்காலம் அமைய எனது வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.
 

Share this story