'கள ஆய்வில் முதல்வர்' திட்டம் : தமிழகத்தில் அறிமுகம்..

By 
mks8

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "கள ஆய்வில் முதல்வர்" என்ற புதிய திட்டத்தை மாவட்ட வாரியாக செயல்படுத்த உள்ளார். வேலூரில் பிப்ரவரி 1-ந்தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக அவர் 1-ந்தேதி அதிகாலையில் வேலூர் காட்பாடிக்கு ரெயிலில் சென்று இறங்குகிறார்.

அங்கு அவரை அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். அன்று காலையில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் சுய உதவிக் குழுக்கள், தொழில் அமைப்புகளின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு அறிகிறார்.

அன்று மாலை 4 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துறை துணைத் தலைவர், காவல் துறை தலைவர் (வடக்கு) ஆகியோருடன் அந்தந்த மாவட்டங்களின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார். அன்றைய தினமே இந்த ஆய்வின் மற்றொரு பகுதியாக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் முக்கிய துறை சார்ந்த அரசு செயலாளர்கள், அமைச்சர்கள், துணைத் தலைவர்கள் ஆகியோர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்களுடன் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

கள ஆய்வில் கிடைக்க பெறும் தகவல்களின் அடிப்படையில், திட்டச் செயல்பாடுகள் குறித்து பிப்ரவரி 2-ந்தேதி நடைபெறும் மாவட்ட கலெக்டர்கள் பங்கு பெறும் ஆய்வுக் கூட்டத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, முக்கிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறை தலைவர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

இவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆய்வு மேற்கொள்வார். முதலமைச்சரின் வேலூர் பயணம் குறித்து உயர் அதிகாரி கூறியதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமாக வேலூருக்கு காரில் செல்வது வழக்கம். இந்த முறை அவர் ரெயிலில் செல்கிறார். 1-ந்தேதி காலையில் வேலூருக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்பாடியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் ரூ. 700 கோடி மதிப்பில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மாலை 5 மணியளவில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மாணவர் விடுதி, ஆராய்ச்சி பூங்கா உள்ளிட்ட கட்டிடங்களை திறந்து வைக்கிறார். அன்று இரவு வேலூர் சரக சட்டம்-ஒழுங்கு குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.

பிப்ரவரி 2-ந்தேதி வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமல ஆகிய 4 மாவட்ட கலெக்டர்களுடன் ஆய்வு மேற்கொண்டு விட்டு அன்று மதியம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story