அண்ணாமலை மீது, ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்..

By 
rvu5

மக்களிடத்தில் உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று நீங்கள் முடிவு எடுத்த காரணத்தினால் தான், இன்று ஜெயலலிதாவை இன்றைக்கு புகழ்வது போல் புகழ்ந்து வஞ்சப்புகழ்ச்சி அணியாக உங்களுக்கு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள துணைக்கு அழைக்கிறீங்கள் என அண்ணாமலையை, ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி பேரையூர் பகுதியை சேர்ந்த 2,000 மேற்பட்ட இளைஞர்கள் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர் பி உதயகுமாரிடம், இந்துத்துவா கொள்கையை ஜெயலலிதா ஆதரித்தார் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய நிலையில்,  முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் அதே கருத்து வலியுறுத்தி பேசியிருப்பது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? பதில் அளித்த அவர்,

பாஜகவின்  தலைவரைப் பற்றி  கொள்கையைபற்றி பேசுவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஜெயலலிதாவின் சமூக நீதிக் கொள்கை பெண்ணுரிமை கொள்கை மாணவ மாணவியர் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த எல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டு உள்நோக்கத்தோடு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அவர்கள் சொல்வதனால் எந்த தாக்கமும் தமிழகத்தில் ஏற்படாது. 

எங்கள் கொள்கை கோட்பாடுகளை அவர்கள்(பாஜகவினர்)  விளக்கம் சொல்லித்தான் தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை . அவர்கள் தங்களை அடையாளப்படுத்துவதற்காகவும் தங்களுக்கு முகவரி தேடுவதற்காகவும் தேசத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஜெயலலிதாவை துணைக்கு அழைத்துக் கொள்வதில் உள்நோக்கம் இருக்கிறது. அரசியல் சூழ்ச்சி இருக்கிறது . இந்துத்துவா என்பது தனி விவாதம் ஆனது அவர்கள் விவாதத்திற்கு அழைக்கிறார்கள் அதற்கு எடப்பாடியார் அவர்கள் விரிவாக தெளிவாக ஏற்கனவே கூறியிருக்கிறார்கள்.  

உங்களுக்கு(பாஜகவினருக்கு) தைரியம் இருந்தால் வீரம் இருந்தால் நீங்கள் உங்கள் தலைவர்களை பெருமைகளை சொல்லி உங்கள் கொள்கைகளை சொல்லி, உங்கள் லட்சியங்களை சொல்லி,  தமிழ்நாட்டு மக்களுடைய நம்பிக்கையை பெற முயற்சி எடுங்கள். ஆனால் மக்கள்  எந்த காலத்திலும் ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்று தெரிந்த பிறகு தான் உங்களுடைய கொள்கைகள் கோட்பாடுகள் சித்தாந்தங்கள் தமிழகத்தில் எடுபடாது மக்களிடத்திலே வரவேற்பு இல்லையென தெரிந்து கொண்டுள்ளீர்கள்.

மக்களிடத்தில் நம்பிக்கை இல்லை என்று நீங்கள் முடிவு எடுத்த காரணத்தினால் இன்று அதிமுகவை வளர்த்தெடுத்த ஜெயலலிதாவை இன்றைக்கு புகழ்வது போல் புகழ்ந்து வஞ்சப்புகழ்ச்சி அணியாக உங்களுக்கு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள துணைக்கு அழைக்கிறீங்க என ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்தார். 

Share this story