எத்தகைய தியாகத்திற்கும் தயார்.! - ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பு; இபிஎஸ் நிலைப்பாடு என்ன.?

By 
opsepsmeet

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக பற பிளவுகளாக அதிமுக சிதறி கிடக்கிறது. இதன் காரணமாக வாக்குகள் பிரிவதால் தேர்தலில் தொடர் தோல்வியை அதிமுக சந்தித்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவிற்கு தோல்வியே பரிசாக கிடைத்தது.

இதனையடுத்து மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற முழக்கம் எழுந்துள்ளது. இது தொடர்பாக முன்னனாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒற்றுமையால் மீட்டெடுக்க அறைகூவல் விடுத்துள்ளார். மேலும்  “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்." இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும்.

"தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே” என்னும் கழக நிறுவனர், புரட்சித் தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம்.

மாண்புமிகு நம் அம்மா அவர்கள் உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும்  ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, எடப்பாடி பழனிச்சாமி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை, வழக்கம்போல செய்தியாளர்கள் சந்திப்பில்; விரைவில் ஜெயக்குமார் வாய்மொழியில் தெரிந்து கொள்ளலாம்.

Share this story