பாஜகவில் இணைந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள்.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி..

By 
pc44

ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் 61 அதிகாரிகள் தங்களுடைய குடும்பத்தினருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

நாகை மாவட்டத்தில் நடைப்பயணத்தின் போது என்னிடம் வந்து ஆர்வமாக பேசிய காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என அண்ணாமலை கூறியுள்ளார். 

சேலத்தில் தனியார் ஹோட்டலில் தமிழக அளவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் 61 அதிகாரிகள் தங்களுடைய குடும்பத்தினருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை;- ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் பாஜகவில் இணைவது மிகவும் மகிழ்ச்சியக்கிறது. சமூகத்தின் பாதுகாப்பிற்காக மிக நேர்மையான முறையில் செயல்பட்ட காவல்துறையினர் ஓய்வு பெற்ற பின்னர் பாஜக இணைவது பொதுமக்களிடையே மிகுந்த எழுச்சியை உருவாக்கும்.

காவல் துறையினருக்கான பிரிவை கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்று தொடங்கப்படும். கட்சியில் இணைந்துள்ள முன்னாள் காவல்துறையினர், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டு தங்களது பகுதிகளில் கட்சியை வளர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், காவல் துறையினருக்கு 8 மணிநேர வேலை, வாரத்திற்கு இரண்டு நாள் விடுமுறை மற்றும் மன அழுத்தம் இல்லா பணி வாய்ப்பு உருவாக்கப்படும் என்றார். நாகை மாவட்டத்தில் நடைப்பயணத்தின் போது என்னிடம் வந்து ஆர்வமாக பேசிய காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீதான பணியிடை நீக்க நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் பணியில் அமர்த்த டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளேன் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் பாஜகவில் இணைந்த சம்பவம் ஆளுங்கட்சியையும், எதிர்க்கட்சியையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

Share this story