சிறுமிக்கு பாலியல் தொல்லை : திமுக கவுன்சிலர் கைது; கட்சியில் இருந்தும் நீக்கம்..

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார்.
மேலும், விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். பக்கிரிசாமி தனது பள்ளியில் படித்து வரும் 6-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பக்கிரிசாமியை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பக்கிரிசாமி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பக்கிரிசாமி செயல்பட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக துரை முருகன் தெரிவித்துள்ளார். 6-வயது சிறுமியை பலாத்காரம் செய்த தி.மு.க. கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.