ஸ்டாலின் தற்போது யூ டியூபராக மாறிவிட்டார்: ஜெயக்குமார் பேச்சு 

By 
ut1

சென்னை வண்ணாரப்பேட்டையில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துக்கொண்டார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாகவும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார். 

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சியில்  சிறுபான்மையினர் அச்ச உணர்வுடன் வாழ்வதாகவும். சிறுபான்மையினரின்  வாக்குகளை பெற  பொய் வாக்குறுதிகளை அளித்து அதனை இன்று வரை நிறைவேற்றவில்லை என்று அவர் கூறினார்.  

தேர்தல் நேரங்களில் மட்டுமே நீட் தேர்வை கையிலெடுக்கும் திமுக இன்றுவரை நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். 

மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்து விட்டு தற்போது மக்களை திமுக அரசு ஏமாற்றி விட்டாதக கூறினார். மேலும் தன்னை ஒரு முதலமைச்சர் என்றும் மறந்து யூ டியூபர் போல தான் பேசும் கருத்துக்கு லைக் பண்ணுங்க, கமண்ட் பண்ணுங்க , ஷேர் பண்ணுங்க பெல் ஐகான் கிளிக் பண்ணுங்க என்று பேசி வருவதாக அவர் சாடினார்.  

மேலும் எம்.ஜி. ஆர் காலம் முதல் இன்றுவரை சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு உண்டான மரியாதையை அதிமுக வழங்கி வருகிறது என்றும் ஆளுநரின் கருத்து திமுகவுக்குதான் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 

 

 

Share this story