அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில், இடைக்கால உத்தரவு: உச்ச நீதிமன்றம்..

By 
kejri22

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தன்னுடைய கைதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் ஜெக்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த முறை வந்தபோது, தேர்தல் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேசமயம், உங்களுக்கு ஜாமீன் வழங்குகிறோம் ஆனால் முதல்வராக தொடர்வதில் உடன்பாடு இல்லை என்பதை கெஜ்ரிவால் தரப்பிடம் உச்ச நீதிமன்றம் பல்வேறு வார்த்தைகளில் கூறியது.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கு மே 9ஆம் தேதி விசாரிக்கப்படும் அல்லது அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனால், மே 9ஆம் தேதி விசாரணை நடைபெறுமா அல்லது வேறு எந்த தேதியில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் மே 10ஆம் தேதி (நாளை மறுநாள்) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த முறை விசாரணையின் போதே, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்துவிடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருகிற வெள்ளிக்கிழமையாவது இடைக்கால நிவாரணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது.

Share this story