சஸ்பெண்ட் விவகாரம் : நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்..
இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், நாளைமுதல் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது, வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையின் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாநிலங்களவை தலைவரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுத இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு அமர்ந்து, நாளை முதல் தர்ணாவில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவின் அறையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவைத்தலைவர் வெங்கையா நாயுடு இடைநீக்கம் செய்யப்பட்டதை வாபஸ் பெற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
*