'நீடித்த நிலையான பருத்தி இயக்கம்' திட்டம் : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

By 
Sustainable Cotton Movement 'Project Launched by Chief Stalin

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :

தமிழ்நாட்டில் ‘வெள்ளைத் தங்கம்’ என்று அழைக்கப்படும் பருத்திப் பயிரானது, சராசரியாக 1.62 லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, 

ஒரு எக்டருக்கு 411 கிலோ உற்பத்தித் திறனுடன் 3.92 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில், சுமார் 2000 நூற்பாலைகள் இயங்குவதால், நாட்டின் பருத்தி நூற்புத்திறனில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

உயர்தர பருத்தி உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கவும், பருத்தி நூற்பாலைகளின் பெருகிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

அவற்றில், மேலும் ஒரு சிறப்பம்சமாக பருத்தி விவசாயிகளின் நலன்கருதி, ரூ.11 கோடி மதிப்பில் நீண்ட இழை பருத்தி சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த உத்திகளை 25,000 எக்டர் பரப்பளவில் செயல்படுத்திட, 

'நீடித்த நிலையான பருத்தி இயக்கம்' என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், 5 விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கித் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், நீண்ட, மிக நீண்ட இழை பருத்தி ரகங்களான எஸ்.வி.பி.ஆர்-5, எஸ்.வி.பி.ஆர்.6,கோ-14, சுரபி, சூரஜ் மற்றும் கோ-17 விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, ஊக்கத் தொகையாக ஒரு கிலோ விதைக்கு ரூ.60 வீதமும், 

சான்று பெற்ற பருத்தி விதைகள் விநியோகத்தின் கீழ் கிலோவிற்கு ரூ.130 வீதம், எக்டருக்கு ரூ.1,300 பருத்தியில் ஊடுபயிர் சாகுபடி செய்திட, பயறு விதைகள் ஒரு எக்டருக்கு ரூ.500, பருத்தி நுண்ணுரங்கள் மற்றும் 

திரவ உயிர் உரங்கள் ஒரு எக்டருக்கு ரூ.950, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கான இடுபொருட்கள் ஒரு எக்டருக்கு ரூ.6,500, விசைகளைக்கருவி ஒன்றிற்கு ரூ.47,000 

மற்றும் தண்டு கூன் வண்டுகளை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு இடுவதற்கு எக்டர் ஒன்றிற்கு ரூ.5,000 வீதம் மானியத்தில் பருத்தி விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டத்தில் விருப்பமுள்ள சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இத்திட்டத்தினால், நடப்பாண்டில் தமிழ்நாட்டின் பருத்தி சாகுபடியினை 1.70 லட்சம் எக்டர் ஆக உயர்த்தவும், பருத்தி மகசூலை ஒரு எக்டருக்கு 380 கிலோவில் இருந்து 430 கிலோ என்ற அளவிற்கு பஞ்சு மகசூலை உயர்த்தி,உற்பத்தியினை 4.30 லட்சம் பொதிகளாக உயர்த்தவும் வழிவகை செய்யப்படும்.

நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர், சர்க்கரைத் துறை ஆணையர் ஹர்மந்தர் சிங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Share this story