மாணவர்களுக்கு மழைக்கோட்டு வழங்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு..
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், சீருடை வழங்கப்படுவது போன்று, இந்த ஆண்டு முதல் மழைக் கோட்டு, கணுக்கால் வரையிலான பூட்ஸ் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ- மாணவியர்கள் படிப்புக்காக, பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை மாணவ-மாணவியர் படிப்புக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப திட்டம் தீட்டி செயலாற்றி வருகிறது.
ஏற்கனவே மாணவ- மாணவிகளுக்கு இலவச சீருடை, இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள் வழங்கப்படுவது போல் வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மழைக்கோட்டு, கணுக்கால் வரையிலான பூட்ஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மழைப்பொழிவு அதிகம் உள்ள மாவட்டங்கள், மலைப்பிரதேச மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு, முதற்கட்டமாக மழைக்கோட்டு, பூட்ஸ் வழங்கப்படும்.
முழுமையாக பள்ளிக் கூடங்கள் திறந்ததும் பாடப்புத்தகங்கள் வழங்கும்போதே, இதையும் சேர்த்து வழங்க பள்ளிக்கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது' என்றனர்.