ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை.. எந்த தொகுதியில் போட்டி?
![tamilisai12](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/ea790e6a68213390aa6e738ca95bd24c.jpg)
தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜன், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பாஜக உறுப்பினரானராக தமிழிசை கடந்த 1999ஆம் ஆண்டு இணைந்தார். இதனை தொடர்ந்து பாஜகவின் வளர்ச்சிக்காக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார். அடிமட்ட தொண்டரில் ஆரம்பித்து அவரது பணி தமிழக பாஜக மாநில தலைவராக உயர்த்தியது.
இதனையடுத்து தமிழகத்தில் பாஜக எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் தமிழிசை களம் இறங்கினார். ஆனால் வெற்றி வாய்ப்பு தான் கிட்டாத நிலை ஏற்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டார். திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியை சந்தித்தார்.
இதனையடுத்து தமிழிசையை தெலங்கானா மாநில ஆளுநர் பதவி கொடுத்து அழகு பார்த்தது பாஜக தேசிய தலைமை. மேலும் அவரது சிறப்பான பணியை பாராட்டும் வகையில் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநிலத்தையும் வழங்கியது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் களத்தில் இறங்கும் வகையில் தனது தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்துள்ளார். இவர் புதுவை தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.