தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக, தமிழ்த்தாய் வாழ்த்து : அரசாணை வெளியீடு
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை, தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது, இனி அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து, முதலமைச்சர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் எழுதிய "நீராருங் கடலுடுத்த" என்ற பாடல் 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் மூன்றாம் நடையில் பாடப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, எழுந்து நிற்பதில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
1913 ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ் சங்கத்தில், நீராருங் கடலுடுத்த என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. அதன்பிறகு, 1914 ஆம் ஆண்டு முதல் கரந்தை தமிழ் சங்கத்தில் இந்த பாடலைப் பாடி வந்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, 1970 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி இனி வரும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் நிச்சயம் இருக்கும் என தெரிவித்திருந்தார்.
1891 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் என்னும் நூலில் "தமிழ் தெய்வ வணக்கம் " என்ற தொகுப்பின் கீழ் உள்ள ஒரு பகுதியை நாம் தமிழ்த்தாய் வாழ்த்தாக பாடுகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.