இதற்காக தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தேன்.! விஜயதரணி கொடுத்த விளக்கம்..

By 
vijaya1

விளவங்காடு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது ஏன் என விளக்கமளித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு எம்எல்ஏவாக விஜயதரணி மூன்றாவது முறையாக இருந்து வருகிறார். தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் முதன்மை கொறடா, கட்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளை விஜயதரணி பதவி வகித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் கட்சியின் மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்து வந்தார். 

இதனால் பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியானது. இதன் காரணமாகவே சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி இன்று மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.  

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயதரணி: காங்கிரஸ் கட்சியில் கிடைத்த மோசமான அனுபவத்தால் பாஜகவில் இணைந்துள்ளேன். காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சி. மிகப்பெரிய தலைவர் பிரதமர் மோடியின் கீழ் இந்தியா பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. அண்ணாமலை பாத யாத்திரையால் தமிழக பாஜகவில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக பாஜக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை நாட்டிற்கு மிக அவசியம். பாஜகவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் கட்சியில் இணைந்துள்ளேன் என விஜயதரணி தெரிவித்துள்ளார். 

Share this story