விடாமல் துரத்தும் போலீஸ்.. நயினார் நாகேந்திரன்,கேசவ விநாயகத்திற்கு மீண்டும் சம்மன்..

By 
ny8

தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட 4 கோடி ரூபாய் பணம் தொடர்பாக விசாரணை நடத்த நயினார் நாகேந்திரன் மற்றும் கேசவ விநாயகத்திற்கு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். நாளை மறுதினம் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில் போலீசாரின் சம்மன் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையலில்,  ஜூன் 1ஆம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவானது நடைபெற உள்ளது. முன்னதாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது தேர்தல் பிரச்சாரத்தின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து  4 கோடி ரூபாய் பணத்தை போலீசார் கைப்பற்றினர்.  

இந்த பணம் நெல்லை தொகுதியில் பாஜக சார்பாக வேட்பாளராக போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என தகவல் வெளியானது. இதனையடுத்து பணத்தை கொண்டு சென்ற நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பெற்றிருந்தனர்.

4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் தொடர்பாக போலீசார் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.  ஆனால் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் வேண்டும் என தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். இதே போல பாஜக நிர்வாகி கேசவவிநாயகத்திற்கும் போலீசார் சம்பவம் அனுப்பி இருந்தனர்.  அவரும் விசாரணைக்கு ஆஜராகாமல் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்தார்.  

போலீசார் அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.  ஆனால் நீதிமன்றமோ விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது.  இந்த நிலையில் மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் ஆஜராக போலீசார்  சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதே பல தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், தொழில் பிரிவு துணைதலைவர் கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்திற்கு பிரதமர் மோடி நாளை மறுதினம் வரவுள்ள சூழ்நிலையில் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பியிருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

Share this story