மோடிக்கு மாற்றுசக்தியாக ராகுல் வருவதற்கு, வாய்ப்பே இல்லை : சொல்கிறது ஓர் அரசியல் கட்டுரை
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், ஜகோ பங்களா என்ற பத்திரிகை நடத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திட்டங்களை, மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதோடு, திரிணாமுல் காங்கிரசின் எதிர்கால திட்டங்களை, இந்த பத்திரிகை வெளிப்படுத்தி வருகிறது.
ராகுல், தவறி விட்டார் :
இந்த பத்திரிகையில் முதல் பக்கத்தில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மிக கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது :
பிரதமர் மோடியை எதிர்க்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியில் முழுமையான ஒருங்கிணைப்பு இல்லை. மோடிக்கு மாற்று சக்தியாக ராகுலை தயார்படுத்த பல தடவை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
ஆனால், ராகுலால் அந்த வாய்ப்புகளில் வெற்றி பெற இயலவில்லை. அவர் அந்த வாய்ப்புகளை பயன்படுத்த தவறி விட்டார்.
வாய்ப்பே இல்லை :
ராகுல்காந்தியால் ஒரு போதும் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது. மோடிக்கு மாற்றுசக்தியாக ராகுல் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
மோடியை எதிர்க்கும் ஒரே தலைவராக தற்போது மம்தா பானர்ஜி மட்டுமே உள்ளார். ஒட்டு மொத்த நாடும் மம்தா பானர்ஜியின் தேசிய அரசியல் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றன.
மம்தா பானர்ஜியை தேசிய தலைவராக ஏற்க வேண்டும். இதற்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.