அரசை குறை கூறும் நேரம் இதுவல்ல: கமல்ஹாசன்

By 
cycy

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள அதன் தலைமை கழகத்திலிருந்து, மிக் ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையின் 10 க்கும் மேற்பட்ட  பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சித்தொண்டர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது, இதனை மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர்  கமல்ஹாசன் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்,

கடந்த 40 ஆண்டுகளாக மக்களுக்காக செய்திருந்த வேலையை தற்போது கேமரா முன் செய்கிறோம். தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறோம். நாம் எதிர்பார்த்த அளவை விட அதிக அளவு பாதிப்பு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு முன்பு வந்தது சிற்றிடர். இது  பேரிடர். கடந்த காலத்தை விட தற்போது அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது இது பேரிடர் பாதிப்பு என்பது எந்த சந்தேகமும் இல்லை, இந்த நேரத்தில் நாம் யாரையும் குறை சொல்ல வேண்டிய நேரம் இல்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறங்கி வேலை செய்ய வேண்டிய நேரம். வேலை மட்டும் கிடையாது இது ஒவ்வொருவரின் கடமை. கொரோனா காலங்களில் இந்த அலுவலகத்தை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான படுக்கையறையாக அறிவித்தேன், ஆனால் இந்த இடம் தொற்றுநோய் பாதித்த இடம் என்று அனுமதிக்கப்படவில்லை.

இந்த மாதிரியான இடையூறுகள் எல்லாம் எனக்கு புதுசல்ல. இயற்கை பேரிடர் பாதிப்பு  என்பதால் நாம் யாரும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு இந்த முறை மழை பதிவாகி உள்ளது.

அவற்றை திமுக ஆட்சியை குறை சொல்லுவதோ,அதிமுக ஆட்சியை குறை சொல்லுவதோ, விட்டு விட்டு அனைவரும் மக்களுக்காக இறங்கி வேலை செய்ய வேண்டும். மேலும் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட 5000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு இயல்பு நிலை திரும்பும் வரை உணவு வழங்குவதாக கூறினார்.

மேலும் தேவைப்படும் இடங்களுக்கு மருத்துவ முகாமையும் வருகிற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Share this story