தடுக்க தவறியவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் :  ராமதாஸ் வலியுறுத்தல் 

By 
liq3

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தையடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

இரு நிகழ்வுகளிலும் ஒரே வகையான கள்ளச்சாராயம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கள்ளச்சாராய உயிரிழப்புகளைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்தி வரும் ஆய்வுகளில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, அவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய மதுவிலக்கு நடைமுறைப் பிரிவு கள்ளச்சாராயத்தை விற்பனை செய்பவர்களுக்கு ஆதரவாக செயல்படும் வரையிலும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது.

கள்ளச்சாராயக் கட்டமைப்பை வேருடன் ஒழிக்க வேண்டும். கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறிய ஊராட்சித் தலைவர், கிராம நிர்வாக அதிகாரி, காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

Share this story