ஆயிரக்கணக்கான கி.மீ. நிலம் ஆக்கிரமிப்பு : ராகுல் குற்றச்சாட்டு
கோவா மாநிலத்தில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோவாவில், தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது :
'பிரதமர் மோடி தனது நெருங்கிய தொழில் அதிபர்களான 5 அல்லது 6 பேரின் நலன்களுக்கு மட்டுமே பணியாற்றி வருகிறார்.
எந்தவொரு விஷயமாக இருந்தாலும், அந்த தொழில் அதிபர்களுக்கு சாதகமாக மட்டுமே பிரதமர் நடந்து கொள்கிறார்.
கோவா மாநிலத்தை, தற்போது நிலக்கரி இறக்குமதி மையமாக மாற்றி இருக்கிறார்கள். மர்மமாக கோவா துறைமுகத்துக்கு நிலக்கரிகள் கொண்டு வரப்பட்டு, அந்த பகுதி முழுவதும் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைய செய்துள்ளனர்.
இது சம்பந்தமாக, மீனவர்கள் பல்வேறு புகார்களை என்னிடம் தெரிவித்தனர். மோடிக்கு வேண்டிய தொழில் அதிபர்களுக்காகத்தான் நிலக்கரி இறக்குமதி இங்கு நடக்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இதை தடுத்து நிறுத்துவோம். துறைமுகங்கள், விமான நிலையங்கள், விவசாயம், சில்லரை வர்த்தகம், டெலிபோன் என முக்கிய துறைகளில் அந்த 6 தொழில் அதிபர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
விவசாய அழிப்பு :
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், பணமதிப்பு இழப்பு திட்டத்தை கொண்டு வந்தார். பின்னர், ஜி.எஸ்.டி. வரி கொண்டு வரப்பட்டது. இவை இரண்டிலும் சாதாரண மக்களும், சிறு தொழில்களை செய்பவர்களும் தான் பாதிக்கப்பட்டனர்.
ஆனால், இந்த இரு நிகழ்வுகளிலும் குறிப்பிட்ட அந்த தொழில் அதிபர்கள் ஆதாயம் அடைந்து இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி. மூலம் சிறு மற்றும் குறு தொழில்கள், வர்த்தகங்கள் அழிக்கப்பட்டு விட்டன.
இப்போது, விவசாயங்களை அழிக்கும் திட்டங்களையும் மோடி கொண்டு வந்து இருக்கிறார்.
ஆயிரக்கணக்கான கி.மீ. நிலம் :
அண்டை நாடான சீனா சமீபகாலங்களில் எல்லையில் ஆக்கிரமிப்புகளை அதிகப்படுத்தி இருக்கிறது. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் இந்திய நிலப்பகுதிகளை அவர்கள் ஆக்கிரமித்து இருக்கிறார்கள்.
இந்திய மண்ணுக்குள் சீன ராணுவம் முகாமிட்டு இருக்கிறது. ஆனால், இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் மோடி மறைக்கிறார். பொய்யான தகவல்களை கூறுகிறார்கள்' என்றார்.
*