கழகத் தொண்டர்களின் கனிவான பார்வைக்கு : ஓபிஎஸ் தரப்பின் தீர்க்கமான மடல் 

By 
marudhu139

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

'பொதுச்செயலாளராக தொண்டர்கள் தேர்வு செய்து, கொண்டாடி மகிழ்ந்த தலைமைதான், அன்றைய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் - புரட்சித்தலைவி அம்மா என்னும் சாஸ்வத சரித்திரங்கள் என்றால்..

இன்றோ.. தொண்டர்களின் உரிமையை பறித்துவிட்டு, பொதுக்குழு என்னும் புறவாசல் வழியே கழகம் எனும் ஆலயத்தை கைப்பற்றி விட்டதாகவும்.. தொண்டர்களுக்கு பதிலாக தனது பணப்பண்ணையில் தீனி போட்டு தான் வளர்த்த  பொதுக்குழு ஆடுகள்.. தனக்கு பொதுச்செயலாளர் பதவியை தந்து விட்டதாகவும்..

கூடவே, நீதிமன்றமும் தன்னை  பொதுச்செயலாளராக நியமித்து விட்டதாகவும் எடப்பாடி என்னும் பதவிப்
பைத்தியம்.. தனக்குத் தானே ஒரு சுய பட்டாபிஷேகம் நடத்திக்கொண்டு.. மக்கள் திலகம் எம்ஜிஆரை போல மாறுவேடம் போட்டு, பித்தலாட்டத்தின் உச்சத்தில் நிற்கிறது.

இந்த அசிங்கமான அபகரிப்பை நடத்தி முடிக்க, ஊடகக் கூலிகள் சிலரையும் வாய் வாடகைக்காரர்கள் பலரையும் அமர்த்திக்கொண்டு, தான் நினைத்ததை சாதித்து விட்டதாக அது நினைக்கிறது.

மேலும், விரும்புவதை விரும்புகிற வடிவத்தில்.. விரும்புகிற நேரத்தில்.. எதையும் பெற்றுக்கொடுக்கும் அமானுஷ்ய சக்திகள் தன்னிடம் இருப்பதாகவும்.. அது ஆணவத்தில் குதிக்கிறது.

ஆனால், இதே அண்ணா தி.மு.க.வுக்கு ப.உ.சண்முகம், ராகாவானந்தம், நாவலர் நெடுஞ்செழியன்,  அன்னை ஜானகி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, திருமதி. சசிகலா போன்றோர் எப்படி பொதுச்செயலாளராக வந்தாலும், தொண்டர்களால் தேர்வு செய்யப்படாத அவர்கள் எப்படி ஒரு இடைவேளை கதாபாத்திரங்கள்  ஆனார்களோ..

அதே போன்று, இன்னும் சொல்லப் போனால்.. அதற்குக் கூட பொருந்தாத, ஒரு காமெடிக்கூத்தை தான் சிலுவம்பாளையத்து சார்லி சாப்ளின் நடத்தி வருகிறார் என்பதே உண்மை.

எங்கே, ஒரு நீதிதேவதை முழுமையாக எம்.ஜி.ஆர் வகுத்துப்போன கட்சியின் மாற்றக்கூடாத விதிகளை, கண் கொண்டு பார்க்கிறதோ..

எங்கே, ஒரு நீதி தேவதையின் செவிகளில் கழகத் தொண்டர்களின் உரிமைக்குரல் முழுமையாக கேட்கிறதோ.. 
அன்று, எடப்பாடியின் ஒட்டுமொத்த அபகரிப்பு அரசியலும் முடிவுக்கு வந்துவிடும் என்பது சத்தியம்.

அது விரைவில் முன்னெடுக்க இருக்கிற மேலமை நீதிமன்றங்களில் அல்லது தேர்தல் ஆணையத்தில் அது நடந்தே தீரும் என்பது திண்ணம்.

ஆக.. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பாரதியார் வேஷம் தொடங்கி, சில தருணங்களில் பிச்சைக்காரன் வேசம் வரை போட்டு ரசிப்பது போல, எடப்பாடியின் டெண்டர் கும்பல் தங்களது குபேரக்கடவுளான எடப்பாடிக்கு.. பொதுச்செயலாளர் வேசம் கட்டிப் பார்க்கிறது என்பதை கழகத் தொண்டர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

எனவே, பூச்செண்டுகளை தாங்களே ஏற்பாடு செய்து.. வாழ்த்துக்களை தாங்களே வரவழைத்து விட்டு, வாழ்த்துக்கள் குவிவதாக வர்ணனை செய்வது.. சில கையேந்தி பவன் தலைவர்களை வரவழைத்து, அவர்கள் வாழ்த்துத் தெரிவிப்பதாக மாயஜாலம் காட்டுவது என தரைப்பாடி கும்பல் நடத்துவது எல்லாமும் பக்கா மோசடிகள் என்பதை கழகத் தொண்டர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

எனவே, எல்லாம் முடிந்தது என எவராவது சொன்னால்.. அவர்களிடம் 'இனி தான் ஆட்டம் ஆரம்பம்' என நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்க..

ஆம்..எடப்பாடி ஒரு போதும் அ.தி.மு.க.வுக்கு பொதுச்செயலாளர் ஆக முடியாது.

மனித சக்தி கடந்த மகா சக்திகள் அமர்ந்த அந்த மகோன்னத ஆசனத்தில், ஒரு போதும் எடப்பாடி எனும் மனசாட்சி இல்லாத துரோகியால் அமரவே முடியாது.

இது நிச்சயம் இதுவே சத்தியம்...

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் உறுதிபட கூறியுள்ளார்.
..................
 

Share this story