அரசியல் ஆடுகளத்தில் குருவை எதிர்கொள்ளும் சிஷ்யன்: டிடிவி தினகரனா.? தங்க தமிழ்செல்வனா.?

By 
selvan

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 25 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

இந்தநிலையில் பல்வேறு தொகுதிகளில் முக்கிய வேட்பாளர்கள் களம் இறங்குவது அந்த தொகுதி ஸ்டார் அந்தஸ்தை பெறும் அந்த வகையில் தற்போது கூடுதலாக இணைந்திருப்பது தேனி மக்களவை தொகுதியாகும். இந்த தொகுதியானது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் கோட்டையாக கருதப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த கோட்டையில் ஓட்டை விழுந்ததாகவே பார்க்கப்படுகிறது.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் களம் இறங்கினார். இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக ஈவிகேஸ் இளங்கோவனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்க தமிழ் செல்வனும் போட்டியிட்டனர். தமிழகம் முழுவதும் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால் இதனையடுத்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களிலும், சட்டமன்ற தேர்தல்களிலும் தோல்வியே அதிமுகவிற்கு பரிசாக கிடைத்தது.

ஓ.பன்னீர் செல்வத்தின் கோட்டையாக பார்க்கப்பட்ட தேனி போடிநாயக்கனூர் தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்திலையே ஓபிஎஸ் வெற்றி பெற முடிந்தது. இதனையடுத்து அதிமுவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக ஓ.பன்னீர் செல்வம் தனித்து விடப்பட்டார். 

இந்தநிலையில் தான் 2024 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் மீண்டும் ஓபிஆர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவோடு டிடிவி தினகரன் களம் இறங்குகிறார். எனவே இந்த தேர்தலில் யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை தற்போது பார்க்கலாம்.

திமுக சார்பாக தங்க தமிழ்செல்வன், அதிமுக சார்பாக தேனி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாராயண சாமி களத்தில் இறங்கியுள்ளனர். இந்த இரண்டு பேருக்கும் டப் கொடுக்க புதிதாக இறங்கியுள்ளார் டிடிவி தினகரன்,  மொத்தம் 16 லட்சம் வாக்குகளை கொண்ட தேனி தொகுதியில் யார் 6 லட்சத்திற்கு மேல் வாக்குகள் பெறுகிறார்களோ அவர்களே வேற்றி பெற்ற வேட்பாளர்களாக கருதப்படுவார்கள்.

தேனி தொகுதியில் மும்முனை போட்டி என்று கூறப்பட்டாலும், அதிமுக திமுக இடையே தான் போட்டி இருக்கும் எனவும், 3வது இடத்தையே டிடிவி தினகரன் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் என்னவென பார்க்கும்போது தேனி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும ஓபிஎஸ் பூத் கமிட்டி கூட அமைக்கவில்லையென கூறப்படுகிறது.

மேலும் ஓ.பன்னீர் செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட இருப்பதால் அவரது ஆதரவாளர்கள் ராமநாதபுரத்தில் தேர்தல் பணிகளில் இறங்கவுள்ளனர். இதனால் டிடிவிக்கு  தேர்தல் பணிக்கு ஆட்கள் இல்லாத நிலை நீடிப்பதாக கூறப்படுகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் பெரும்பாலானோர் அதிமுகவில் இணைந்து விட்டனர். 

எனவே தேர்தல் பணிகளை திறம்பட மேற்கொள்வது கேள்வி குறியாக மாறிவிட்டது. மேலும் டிடிவி தினகரனுக்கு இஸ்லாமிய ஓட்டுகள் அதிகளவு இருந்தது. தற்போது பாஜகவில் இணைந்து விட்டதால் இஸ்லாமிய வாக்குகளும் டிடிவிக்கு கிடைக்குமா என்பது  கேள்வி குறியை எற்படுத்தியுள்ளது. எனவே இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயண சாமி மற்றும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் இடையேதான் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை டிடிவி தினகரன் தடுக்க கூடும் என்றே கூறப்படுகிறது. 

Share this story