தேனி தொகுதியில் களம் காண்கிறார் டிடிவி தினகரன்; ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
![theni3](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/b38fe61baa1cd8fd47b91ca8675f7974.jpg)
வருகின்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் கூட்டணிக்கட்சி ஆதரவோடு சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
அதே போன்று கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐஜெக தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியிலும், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் வேலூர் தொகுதியிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தனர்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தேனியில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை தேனி தொகுதியில் போட்டியிடுமாறு நான் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார்.
நிர்வாகிகள் யாரேனும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால் நானே நேரடியாக தேர்தலில் இறங்கி உள்ளேன். டிடிவி தினகரனின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.