அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்..
![udhayanidhi8](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/6f090cdc62a4c6d4c0aff6ce9d2432d6.jpg)
சனாதனத்தை இழிவுபடுத்தி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்” என்று பேசினார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு தேசிய அளவில் விவாதங்களை கிளப்பியது. அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், தான் பேசிய கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.
அதேசமயம், உதயநிதி ஸ்டாலின் மீது உச்ச நீதிமன்றம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படும் இத்தகைய மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. நாடு முழுவதும் 40க்கும் அதிகமான வழக்குகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.” என தமிழக அரசு வாதிட்டது.
அந்தவகையில், அமைச்சர் உதயநிதியின் பேச்சு இந்துகளின் உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கறிஞர் கவுசலேந்திர நாராயணன் என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதிமன்றம், பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் எம்.பி., எம்.எல்.ஏ,க்களின் வழக்குகளை விசாரிக்கும் அம்மாநில சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக, “சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப் படுகொலை செய்ய வேண்டும் என நான் ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை. சனாதன தர்மம் என்பது சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் கொள்கை. சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதாகும். நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக நிற்கிறேன்.” என தனது பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.