தமிழ்நாட்டினுள் கால் வைக்க விடமாட்டோம்.. தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது: ஸ்டாலின் அதிரடி

By 
caa

ஒரு வார காலத்தில் இந்தியாவில் குடியிருமை சட்டம் கொண்டு வரப்படும் என பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்தில்  CAA கால்வைக்க விடமாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் பாஜக ஆளாத மாநிலங்களிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒப்புதல் அளிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இன்னும் ஒரு வார காலத்தில் இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்படும் என பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர்.

இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான். அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது கழகம்.

2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே CAA-வைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம். தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Share this story