ஜெகன் கட்சியின் 15 எம்.பி.க்கள் பாஜகவுடன் இணைகிறார்களா? சந்திரபாபு நாயுடு இதை யோசிச்சாரா?

By 
ysr3

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேரும் மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ள 11 பேரும் பாஜவுடன் இணைய இருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி ஞாயிற்றுக்கிழமை மத்தியில் புதிய ஆட்சி அமைக்க உள்ளது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க இருக்கிறார். இதற்காக தலைநகர் டெல்லியில் விமரிசையாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தி விழாவில் நேபாள பிரதமர் புஷ்ப கமல், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வங்கேதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகிய அண்டை நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். பாஜக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் இந்த விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ள ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக உருவாக்கியுள்ளார். ஆட்சியில் அவரது கட்சிக்கு முக்கியப் பங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாக மாறியுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பாஜக பக்கம் தாவ இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வென்று எம்.பி.யாகியுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேரும் மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ள 11 பேரும் பாஜவுடன் இணைய இருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கு தேசம், ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுன் கூட்டணி ஆட்சி அமைக்கும் பாஜகவுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்களும் இணைவது புதிய பலமாக அமையக்கூடும். இன்னும் ஓரிரு தினங்களில் அவர்கள் பாஜகவுடன் இணைவார்கள் என அவர்களுக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இணையக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, தெலுங்கு தேசம் கட்சியின்  6 மாநிலங்களவை உறுப்பினர்களில் 5 பேர் பாஜகவில் இணைந்தனர். அதுபோல இப்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்களும் பாஜக பக்கம் சாயக்கூடும் என்று தெரிகிறது.

Share this story