ராகுல் கொண்டு வந்த சட்டத்தால், அவரது பதவியே பறி போனது : டிடிவி.தினகரன்

By 
ttvd5

திருச்சியில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் பலமுறை சொல்லிவிட்டேன். பதவி வெறி மற்றும் ஒரு சிலரின் சுயலாபத்தால் அம்மாவின் இயக்கம் தொடர்ந்து பலவீனப்பட்டு வருகிறது. அதனை அ.தி.மு.க.வின் உண்மை தொண்டர்கள் ஒன்றிணைந்து மீட்டெடுக்க வேண்டும்.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் நிறைய மாணவர்கள் தேர்வு எழுதாமல் தவிர்த்ததற்கு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிக்க சென்றுவிட்டதாக துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார். மாணவர்கள் கல்வி இடைநிற்றலை புள்ளி விபரங்கள் மற்றும் ஆதாரத்துடன் வெளியிட வேண்டியது அமைச்சரின் கடமை. அதை அவர் செய்வார் என்று நம்புகிறேன்.

கடந்த 2013-ல் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தால் அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்கலாம் என கூறப்பட்டது. ஒருவர் ஒரு பதவியில் இருக்கும் போது அவரது பதவி பறிபோனால் மேல்முறையீடு செய்து இறுதி தீர்ப்பு வரும் வரை அந்த பதவியில் தொடரலாம் என்ற நிலையை ராகுல் காந்தி ஒத்துக் கொள்ளவில்லை.

பின்னர் அந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ராகுல் காந்தி கொண்டு வந்த சட்டம் இன்றைக்கு அவரையே பாதித்துள்ளது. இதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Share this story