தேர்தலில் கூட்டணி யாருடன்.?: சரத்குமார் பதில்..

By 
sarath3

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக, பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்த வரையில் 2026 சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு என்றும் ஆனால் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதால் அதையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் எங்களுக்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.

கல்வியையும் சுகாதாரத்தையும் தவிர மற்ற இலவசங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர்,  ஜனநாயகம் என்பது பணநாயகமாக மாறிவிட்டதால் பணத்தைக் கொடுத்து வாக்கை வாங்கி விடலாம் என்று நம்புகின்றனர் என்று கூறியுள்ளார்.

தலைவர் என்ற முறையில் கூட்டணி குறித்து முடிவெடுக்க தனிப்பட்ட அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டாலும் நிர்வாகிகளின் கருத்தைக் கேட்டறிய வேண்டியது அவசியம் என்றும் சரத்குமார் தெரிவித்தார்.

அதிமுகவுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும், பாஜகவின் முக்கிய தலைவர்களும் என்னை தொடர்பு கொண்டு கூட்டணி குறித்து பேசி உள்ளதாகவும் தெரிவித்த சரத்குமார்,  ஒரு வாரத்தில் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.

Share this story