ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தானை, இலங்கை வீழ்த்தியது எப்படி?.. ஆடுகள விவரம்..

By 
asia45

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் ஆசம் 30 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு வீரர் ரிஸ்வான் 14 ரன்னுடன் வெளியேறினார். பகார் ஜமான், இப்திகர் அகமது, தலா 13 ரன்னுடன் பெவிலியன் திரும்பினர். முகமது நவாஸ் 26 ரன் எடுத்த நிலையில் ரன்அவுட்டானார்.

பாகிஸ்தான் அணி 19.1 ஓவர் முடிவில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசரங்கா டிசெல்வா 3 விக்கெட்களையும், மகீஸ் தீட்க்சனா, பிரமோத் மதுஷன் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தனன்யா டிசெல்வா, கருணாரத்னே தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து விளையாடிய இலங்கை அணியில் குசால் மெண்டீஸ், குணதிலகா டக் அவுட்டானார்கள். நிசாங்கா 55 ரன்கள் குவித்தார்.

பானுகா ராஜபக்சே 24 ரன் எடுத்து அவுட்டானார். தாசுன் ஷனகா 21 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி 17 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்திற்கு இந்த இரு அணிகளும் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. எனவே இந்த ஆட்டம் இறுதிப் போட்டிக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக அமைந்தது.

Share this story