செஸ் போட்டி : 2 அணிகளுக்கு, தலா ரூ.1 கோடி பரிசு : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
 

By 
chesso7

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் 2 அணிகளுக்கும், தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது. 

இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் பொதுப்பிரிவில் 'இந்திய பி அணியும்' பெண்கள் பிரிவில் 'இந்திய ஏ அணியும்' என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 

44-வது பன்னாட்டு சதுரங்க விளையாட்டு போட்டிகளில், பொதுப் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற 'இந்திய பி அணிக்கும்', 

பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற 'இந்திய ஏ அணி (பெண்கள்)' ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக தலா ஒரு கோடி‌‌ ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும். 

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கமும், அர்மெனியா வெள்ளியும், பெண்கள் பிரிவில் உக்ரைன் தங்கமும், ஜார்ஜியா வெள்ளி பதக்கமும் பெற்றன.
*

Share this story