ஹர்திக் பாண்ட்யாவுக்கு, பாக்.முன்னாள் வீரர் சோயிப் அக்தர் அன்பான எச்சரிக்கை..
இந்திய கிரிக்கெட் அணியின் மிக சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்பவர் ஹர்திக் பாண்ட்யா.
2016 ஆம் ஆண்டு முதல், இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவான இவர், காயம் மற்றும் பிட்னெஸ் பிரச்னையால் கடந்த 2 ஆண்டுகளில் பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்கவில்லை.
அதே நேரத்தில், கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்டர் இடத்திற்கு தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் ஆகிய வீரர்கள் போட்டிபோட்டு காத்திருக்கின்றனர்.
ஐபிஎல் முக்கியம் :
நடப்பு ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் பாண்ட்யா.
இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றால், இந்த ஐபிஎல் சீசன் அவருக்கு மிக முக்கியமானது.
காயமடைய வாய்ப்பு :
இந்நிலையில், அவர் மீண்டும் காயம் காரணமாக, சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை. தற்போது, இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஷோயிப் அக்தர் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஷோயிப் அக்தர், 'துபாயில் பும்ராவிடமும் ஹர்திக் பாண்ட்யாவிடமும் இதைப் பற்றி நான் கூறியிருக்கிறேன். அவர்கள் இருவருமே மெலிந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு பின்புறத்தில் சதையே கிடையாது.
தோள்பட்டைக்கு பின்னால் நான் இப்போதும் கூட வலுவான சதைகளை பெற்றிருக்கிறேன். பாண்ட்யாவை ஒருமுறை தொட்டுப் பார்த்தேன்.
அவர், மிக ஒல்லியாக இருக்கிறார். அவர் காயமடைய வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கவும் செய்தேன்.
ஆனால் அவர், நான் அதிக கிரிக்கெட் ஆடியிருக்கிறேன் என்றார். ஆனால், அதே போட்டியிலேயே அவர் காயமடைந்தார்' என்றார்.