ஐபிஎல் ஒளிபரப்பு ஏலம் இன்று தொடக்கம் : உரிமம் பெற, பிரபல நிறுவனங்கள் கடும்போட்டி
 

By 
ipl media

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 

அதிக ரசிகர்கள் இந்தப் போட்டியை பார்ப்பதால், ஒளிபரப்பு உரிமத்தைபெற எப்போதுமே கடும் போட்டி நிலவும். 

2008-ம் ஆண்டு முதல், 2017-ம் ஆண்டு வரை சோனி நெட்வொர்க் நிறுவனம் ரூ.8,200 கோடிக்கு ஒளிபரப்பு உரிமத்தை பெற்று இருந்தது. 

2018-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை ஸ்டார் நிறுவனம் ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்பியது. அந்த நிறுவனம் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.16,347 கோடிக்கு வாங்கி இருந்தது. 

2023-ம் ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். போட்டிக்கான ஒளிபரப்பு மற்றும் இணையவழி பயன்பாட்டுக்கான டிஜிட்டல் உரிமத்துக்கான டெண்டர் பணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே தொடங்கி இருந்தது. 

ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலம் மின்னணு முறையில் இன்று தொடங்குகிறது. 

வாரியம் எடுத்த முடிவு :

இந்த முறை ஐ.பி.எல். போட்டிக்கான உரிமம் இந்திய துணைக்கண்டம் ஒளிபரப்பு என 4 பிரிவாக பிரித்து வழங்க, இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 

ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலத்தில் இருந்து அமேசான் நிறுவனம் திடீரென விலகி உள்ளது. 

ரிலையன்ஸ்-வால்ட் டிஸ்னி :

ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம் 18, ஜே.வி. தற்போதைய ஒளிபரப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி (ஸ்டார்), ஜீ குழுமம், சோனி நிறுவனம் ஆகியவை கடும் போட்டியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

10 நிறுவனங்கள் போட்டியில் உள்ளன. 2 அல்லது 3 ரவுண்டுகள் ஏலம் கேட்க வாய்ப்பு உள்ளது. 

அதிக தொகையை கேட்கும் நிறுவனத்துக்கு ஒளிபரப்பு உரிமம் வழங்கப்படும். 

ஐ.பி.எல். ஒளிபரப்பு மற்றும் இணைய வழி பயன்பாடுக்கான டிஜிட்டல் உரிமம் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*

Share this story