ஐபிஎல் கலக்கல் : 3 ரன்ல, மும்பையை வீழ்த்தி, ஐதராபாத் ரகள..
 

srh

ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. 

பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர், தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 65-வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்  - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இந்த போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

ராகுல் திரிபாதி :

தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா - பிரியம் கார்க் களமிறங்கினர். 

அபிஷேக் சர்மா  9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பிறகு, கார்க் உடன் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரியம் கார்க் 42 ரன்களில் ரமன்தீப் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

மறுமுனையில், சிறப்பாக விளையாடிய திரிபாதி அரைசதம் கடந்து அசத்தினார். நிக்கோலஸ் பூரன் தனது பங்கிற்கு 22 பந்துகளில் 38 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார்.

சிறப்பாக விளையாடி வந்த ராகுல் திரிபாதி 44 பந்துகளில் 76 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.  

ரோகித்-இஷான் கிஷன் :

மும்பை அணி தரப்பில், ரமன்தீப் சிங் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். 194 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இந்த சீசனில் இதற்கு முன் இல்லாத அளவிற்கு இருவரும் ஜோடி சேர்ந்து எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 

வணவேடிக்கைகள் காட்டிய ரோகித் சர்மா 36 பந்துகளில் 48 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர், டேனியல் சாம்ஸ் களமிறங்கினார்.

ரோகித்தை தொடர்ந்து இஷான் கிஷன் 43 ரன்களில் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, மும்பை அணி சரிவை நோக்கி சென்றது. ஐதராபாத் வேகம் உம்ரான் மாலிக் 15 ரன்களில் டேனியல் சாம்ஸை வெளியேற்றினார்.

ஒருகட்டத்தில் தோல்வியின் பிடியில் மும்பை இந்தியன்ஸ் அணி இருந்தது. கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 45 ரன்கள் தேவைப்பட்டது. 

ஐதராபாத் பந்துவீச்சாளர் நடராஜன் வீசிய 18-வது ஓவரில் மும்பை வீரர் டிம் டேவிட் 4 சிக்சர்களை பறக்கவிட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதே ஓவரில் இறுதி பந்தில் அவர் ரன் அவுட்டானார். 18 பந்துகளில் 46 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார்.

பிளே ஆப் :

இறுதியில், மும்பை அணி  20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம், ஐதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்கு பிறகு ஐதராபாத்தை அணி 6-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

இதன்மூலம், அந்த அணி 12 புள்ளிகளுடன் பிளே ஆப்-க்கான வாய்ப்பிலும் நீடிக்கிறது.
*

Share this story