மும்பையில், ரிஷப் பண்டுக்கு மேல் சிகிச்சை..

By 
rishbh2

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் (வயது 25). இவர் கடந்த டிசம்பர் 30-ந்தேதி அதிகாலை டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு மெர்சிடிஸ் ரக சொகுசு காரில் சென்றார். காரை ரிஷப் பண்டே ஓட்டி சென்றார்.

டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் ஹம்மத்பூர் ஜல் என்ற இடத்திற்கு அருகே ரூர்கியின் நர்சன் எல்லை பகுதியில் அதிவேகமாக சென்றபோது, அன்று அதிகாலை 5.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அவரது தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு, டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரிஷப் பண்ட்டை மேல் சிகிச்சைக்காக இன்று மும்பைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை மும்பையில் உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்ல இருக்கிறோம் என டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் கூட்டமைப்பின் (டி.டி.சி.ஏ.) இயக்குனர் ஷியாம் சர்மா செய்தியாளர்களிடம் இன்று கூறியுள்ளார்.

இதற்கு முன்பு டி.டி.சி.ஏ. வெளியிட்ட செய்தியில், பண்ட்டை பார்க்க மக்கள் செல்ல வேண்டாம். அதனை தவிர்க்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது. வி.ஐ.பி.க்கள் யாரும் அவரை பார்க்க செல்லவில்லை. இதனால் அவருக்கு நோய் தொற்று ஏற்படுவது தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 

Share this story