மிகப்பெரிய வீரர் என்பதை ரோகித் நிரூபித்துவிட்டார் : தினேஷ் கார்த்திக்

By 
t207

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. மழையால் ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா அணி 8 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்தது.

பின்னர் விளையாடிய இந்திய அணி 7.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை 25-ந்தேதி நடக்கிறது. கடைசி ஓவரில் முதல் பந்தில் சிக்சரும், 2-வது பந்தில் பவுண்டரியும் அடித்து வெற்றிக்கு தனது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. வேகப்பந்து வீச்சை அவர் எதிர் கொண்ட விதம் சிறப்பாக இருந்தது. மிகப்பெரிய வீரர் என்பதை அவரது ஆட்டம் வெளிப்படுத்தியது.

வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடும் திறமை அவரை போல வேறு யாருக்கும் இல்லை. எனக்கு 2 பந்துகள் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த பந்துகளில் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

Share this story