டி20 கிரிக்கெட் டுடே : கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா அசத்தலான வெற்றி; அதிரடி விவரம்..

By 
t20i

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவு பெற்றன.

இதில் குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இந்நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற சூப்பர் லீக் சுற்று கடைசி ஆட்டத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 15 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு வீரர் கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 51 ரன் குவித்த நிலையில் பெவிலியன் திரும்பினார். கோலி 26 ரன் அடித்தார்.  வழக்கம் போல் அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவ் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 61 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக களம் இறங்கிய ரிஷப் பண்ட் 3 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஹர்திக் பாண்ட்யா 18 ரன் அடித்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே 17.2 ஓவர் முடிவில் 115 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக அந்த அணியின் ரியான் பர்ல் 35 ரன்னும், சிக்கந்தர் ராசா 34 ரன்னும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.  இந்தியா தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களும், சமி, ஹர்திக் தலா 2 விக்கெட்களும், புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப்சிங், அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

Share this story