அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே : விராட்கோலி உருக்கம்

By 
kohli2

இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக விராட் கோலி சதம் அடிக்கவில்லை என கடும் விமர்சனம் எழுந்து வந்தது.

ஆனால் அவை அனைத்திற்கும் ஆசிய கோப்பையில் சதம் அடித்து பதிலடி கொடுத்திருந்தார் விராட் கோலி. டி20 உலக கோப்பை தொடரில் நம்பர் ஒன் வீரராக திகழ்ந்தார்.

டி 20 உலக கோப்பை தொடருக்கு பிறகு தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வில் உள்ள விராட் கோலி, வங்காளதேச அணிக்கு எதிராக டிசம்பர் 4-ம் தேதி ஆரம்பமாகும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளார். இதற்காக தற்போதிலிருந்தே விராட் கோலி தயாராகி வருகிறார். இந்த நிலையில் விராட் கோலி தற்போது பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

உலக கோப்பையில் ரசிகர்களால் தற்போது வரை பேசி வரும் போட்டி என்றால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி தான். சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா சந்தித்தது. இதில் கோலி பேட்டிங் பலரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது.

இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த கோலி, 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், இந்த டி 20 உலக கோப்பை தொடரில் சிறந்த போட்டி இது தான் என்றும் பலர் குறிப்பிட்டு வந்தனர். இது தொடர்பாக உருக்கமான பதிவு ஒன்றையும் விராட் கோலி பகிர்ந்துள்ளார்.

பேட்டிங் முடிந்து மைதானத்தில் இருந்து தான் நடந்து செல்லும் புகைப்படம் ஒன்றை பகிரந்த விராட் கோலி, "அக்டோபர் 23, 2022 எப்போதும் என் இதயத்தில் ஸ்பெஷலான ஒன்றாக இருக்கும். கிரிக்கெட் விளையாட்டில் இப்படி ஒரு எனர்ஜியை இதற்கு முன்பு நான் உணர்ந்ததே இல்லை. எப்படி ஒரு பாக்கியம் நிறைந்த மாலை வேளை அது" என நெகிழ்ந்து போய் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

Share this story