சிஎஸ்கே அணிக்கு மீண்டும் கேப்டன் ஆகிறார் டோனி : நிர்வாகம் தகவல்

By 
msd1

ஐ.பி.எல். சீசனில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வேறு எந்த அணியும் சாதிக்காத வகையில்  9 முறை இறுதிப் போட்டிக்கு நுழைந்து சாதனை படைத்துள்ளது. 

இதில் 4 தடவை (2010, 2011, 2018, 2021) கோப்பையை வென்றுள்ளது.  5 தடவை 2-வது இடத்தை பிடித்தது. 

இவ்வாறு சென்னை அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு முக்கிய காரணமாக  விளங்கிய கேப்டன் டோனி இந்த சீசனில் இல்லை. போட்டி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார்.

ஆனால், டோனி இல்லாத நிலையில் இந்த சீசனில் சென்னை அணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 

இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை அணி, புள்ளிப் பட்டியலில் 9-ம் இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், கேப்டன் பொறுப்பை மீண்டும் டோனியிடம் ஒப்படைக்க உள்ளார் ஜடேஜா. கேப்டன் பதவியை ஏற்க டோனியும்  சம்மதித்துள்ளார்.

இது தொடர்பாக சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு:

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியை மீண்டும் எம்.எஸ்.டோனியிடம் ஒப்படைக்கிறார் ஜடேஜா. 

அவர், தனது ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தவும், சி.எஸ்.கே. அணியை வழிநடத்தவும் டோனியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஜடேஜா தனது விளையாட்டில் கவனம் செலுத்த அனுமதிக்கும் வகையில், அணியை வழிநடத்த டோனி ஒப்புக்கொண்டார்.

இவ்வாறு சிஎஸ்கே தெரிவித்துள்ளது.
*

Share this story