தோல்வியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் : சச்சின் கருத்து

By 
sachin2

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், கிரிக்கெட் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

இந்திய அணியை ரசிகர்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அதுபோல வாழ்க்கைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. நம் அணியின் வெற்றியை நம் சொந்த வெற்றியைப் போல் கொண்டாடும் போது, நம் அணியின் தோல்வியையும் நாம் ஏற்று கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கான் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், இந்திய அணி முழு தேசத்திற்கும் உண்மையில் ஒரு அற்புதமான அனுபவமாக இருந்து வருகிறது. இருந்தாலும் உங்கள் இறுதிப் போட்டிக்கான பயணம் விரைவில் முடிந்து போனது. எனினும் அணியின் ஒவ்வொரு விளையாட்டையும் நாங்கள் ரசித்தோம். வெற்றி தோல்வி என்பது விளையாட்டின் ஒரு அங்கம். இரண்டு முடிவுகளும் தவிர்க்க முடியாதவை.

அதனால் நாங்கள் உங்கள் உடன் நிற்கிறோம். சிறந்த அணியுடன் நிற்க நாங்கள் இங்கு இருக்கிறோம். முன்னெப்போதையும் விட வலுவாகவும் சிறப்பாகவும் திரும்பி வருவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

Share this story