இந்திய அணியில் மீண்டும் 'யார்க்கர் கிங்' நடராஜன் : கவாஸ்கர் தகவல்
ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, முதல் 2 ஆட்டத்தில் தோற்றது.
அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. தற்போது புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
அதிக விக்கெட் :
ஐதராபாத் அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவர் 7 ஆட்டத்தில் 15 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
இந்த சீசனில் யசுவேந்திர சாஹலுக்கு (ராஜஸ்தான்) அடுத்தபடியாக அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் 2-வது இடத்தில் உள்ளார்.
நடராஜனை ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்த ஐதராபாத் அணி தக்க வைத்துக் கொண்டது.
பெங்களுரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.
சிறப்பு :
இந்நிலையில், தமிழக வேகப்பந்து வீரர் டி.நடராஜனை முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :
காயத்தில் இருந்து மீண்டு ஐ.பி.எல்.லில் ஆடி வரும் நடராஜனின் பந்து வீச்சு என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அவர் யார்க்கர் ஸ்பெசலிஸ்ட் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், அவர் நன்றாக பிடித்து வீசுகிறார். காயத்தால் அவரை இந்திய அணி இழந்து இருந்தது.
அவர், மீண்டும் போட்டி களத்தில் இருப்பார். 16 முதல் 20 ஓவர்கள் வரை பந்து வீசுவதில் அவர் சிறப்பாக செயல்படுகிறார்.
நடராஜன் கண்டிப்பாக இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பைக்கான அணியில் இடம் பெறுவதை அவர் நோக்கமாக கொண்டுள்ளார்' என்றார்.
*