கிரிக்கெட் பரபரப்பு : ரசிகரை கன்னத்தில் அறைந்த ஷாகிப் அல் ஹசனின் செயல் வைரல்..

By 
al0

இந்தியாவில் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணி விளையாடிய 9 லீக் போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்தது. 

இந்த தொடரில் 7 போட்டிகளுக்கு ஷாகிப் அல் ஹசன் கேப்டனாக இடம் பெற்று விளையாடினார். இதில், அவர் 186 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்த தொடருக்கு பிறகு நாடு திரும்பிய அவர் வங்கதேச அரசியலில் நுழைந்தார். ஆனால், கிரிக்கெட்டிலிருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை. கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதற்கு முன்னதாகவே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியில் இணைந்தார். அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு ஷாகிப் அல் ஹசனுக்கு வழங்கப்பட்டது.

அதன்படி, தனது சொந்த தொகுதியான மகுரா தொகுதியில் போட் (BOAT) சின்னத்தில் போட்டியிட்டார். இந்த நிலையில், தனது தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையத்தை பார்வையிடச் சென்றுள்ளார். அப்போது அவரை ரசிகர்கள் சூழந்து கொண்டு நடக்க முடியாதபடி வழி மறித்திருக்கின்றனர். 

ஒரு ரசிகர் அவருக்கு பின்னால் நின்று கொண்டு அவரது 2 கையை பிடித்தது போன்று தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஷாகிப் அல் ஹசன் அந்த ரசிகரின் கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this story