பாலியல் வழக்கில் பிரபல கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் சிறைதண்டனை.. 

By 
nene

பாகிஸ்தான் மற்றும் இலங்கை நடத்திய ஆசிய கோப்பை தொடரில் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இதே போன்று கடந்த 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு இடம் பெற்றார்.

ஆனால், 2018 ஆம் ஆண்டில் 3 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளும், 2019 ஆம் ஆண்டுகளில் 6 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளும் கைப்பற்றினார். அதன் பிறகு ஐபிஎல் தொடரில் இடம் பெறவில்லை. நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் சந்தீப் இதுவரையில் 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 112 விக்கெட்டுகளையும், 52 டி20 போட்டிகளில் விளையாடி 98 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சந்தீப் லமிச்சனே காத்மண்டுவில் உள்ள ஹோட்டலில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் கூறப்பட்டபோது சந்தீப் லமிச்சனே வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்தார்.

பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடி வந்தார். இந்த நிலையில் தான் அவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இதில், அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. மேலும், வரும் ஜனவரி மாதம் அவருக்கான தண்டனை விவரங்கள் குறித்து அறிவிக்கபடும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் நேபாள் நீதிமன்றம் சந்தீப் லமிச்சனேவிற்கு தண்டனையை அறிவித்துள்ளது. அதன்படி, ஷிஷிர் ராஜ் தாகலின் அமர்வு இன்று விசாரணைக்குப் பிறகு இழப்பீடு மற்றும் அபராதத்துடன் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியதாக நீதிமன்ற அதிகாரி ராமு சர்மா உறுதி செய்தார்.

Share this story