பரிதாபமாக வெளியேறிய குஜராத் ஜெயிண்ட்ஸ், தபாங் டெல்லி அணிகள்: இன்று அரையிறுதிப் போட்டி தொடக்கம்..

By 
kab7

புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 

இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு காளைகள், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் என்று 12 அணிகள் இடம் பெற்று விளையாடின.

அகமதாபாத், பெங்களூரு, புனே, சென்னை, நொய்டா, மும்பை, ஜெய்பூர், ஹைதராபாத், பாட்னா, டெல்லி, கொல்கத்தா, பஞ்ச்குலா ஆகிய பகுதிகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு அணியும் 22 போட்டிகளில் விளையாடின. தமிழ் தலைவாஸ் 9ல் வெற்றியும், 13ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

புனேரி பல்தான் 17ல் வெற்றியும், 2ல் தோல்வியும், 3ல் டையும் அடைந்த நிலையில் 96 புள்ளிகள் பெற்று நேரடியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியானது 22ல் போட்டிகளில் 16ல் வெற்றியும், 3ல் தோல்வியும், 3 போட்டியும் டை ஆன நிலையில் 92 புள்ளிகள் பெற்று நேரடியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதையடுத்து தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதில், நடந்த அடுத்தடுத்த பிளே ஆஃப் எலிமினேட்டர் போட்டிகளில் ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளும், தபாங் டெல்லி மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகளும் மோதின. பரபரப்பாக நடந்த முதல் எலிமினேட்டர் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் கூடுதலா 2 புள்ளிகள் பெற்று மொத்தமாக 37 புள்ளிகள் பெற, தபாங் டெல்லி 35 புள்ளிகள் மட்டுமே பெற்ற நிலையில் 2 புள்ளிகளில் பரிதாபமாக தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

இதேபோன்று நடந்த எலிமினேட்டர் 2ஆவது போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இதில், ஹரியானா ஸ்டீலர்ஸ் தொடக்க முதலே புள்ளிகள் பெற்ற நிலையில் கடைசியாக 42 புள்ளிகள் பெற்றன. ஆனால், குஜராத் ஜெயிண்ட்ஸ் 25 புள்ளிகள் மட்டுமே பெற 17 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இன்று 28 ஆம் தேதி நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் புனேரி பல்தான் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் நடக்கிறது. இதே போன்று 2ஆவது அரையிறுதிப் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று இரவு 9 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இதில் வெற்றி பெறும் அணிகள் வரும் மார்ச் 1 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. அதோடு 10 ஆவது சீசன் முடிவடைகிறது. இதுவரையில் நடந்த 9 சீசன்களில் முறையே ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் சீசன் 1 மற்றும் 9ஆவது சீசன்களில் வெற்றி பெற்றது. இதே போன்று, பாட்னா பைரேட்ஸ் அணியானது, சீசன் 3, 4 மற்றும் 5 சீசன்களில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

அந்த வகையில், தற்போது தற்போது அரையிறுதிப் போடிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மட்டுமின்றி புனேரி பல்தான் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளும் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story