வாரியம் மீது கடும் அதிருப்தி : கிரிக்கெட்டில் இருந்து மேத்யூஸ் ஓய்வு?
இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் கொண்டு வரப்பட்ட வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மறுத்து விட்டனர்.
சம்பளம் குறைப்பு, களத்தில் திறமையை வெளிப்படுத்தும் அடிப்படையில், ஊக்கத்தொகை போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த இலங்கை வீரர்கள் புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்கவில்லை.
தனித்தனி ஒப்பந்தம் :
இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியம் வருடாந்திர ஒப்பந்தத்திற்கு பதிலாக, ஒவ்வொரு தொடருக்கும் வீரர்களுக்கு தனித்தனியாக ஒப்பந்தத்தை கொண்டு வருகிறது.
இதன்படி, வருகிற 13-ந்தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் விளையாட உள்ள இலங்கை அணிக்கான ஒப்பந்த பட்டியலில் 30 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 29 பேர் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர். அவர்களில் இருந்து இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான இலங்கை அணி தேர்வு செய்யப்படும்.
விலகல் :
ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஏற்க திட்டவட்டமாக மறத்துவிட்ட ஆல்-ரவுண்டர் மேத்யூஸ் இந்திய தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இருப்பினும், அவர் தனிப்பட்ட காரணத்துக்காக அணித்தேர்வில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இலங்கை கிாிக்கெட் வாரியம் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ள 34 வயதான மேத்யூஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.